தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், இன்றும் நாளையும் முழு நேரம் செயல்படக் கூடிய துறைகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில், மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என இன்று தமிழக அரசு அறிவித்தது.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், சென்னையில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,” இன்றும் நாளையும், வழக்கம்போல 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் தேவைகளுக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ” என தெரிவித்தார்.
அதுபோன்று சலூன் கடைகளும் இன்றும் நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் டாஸ்மாக்கடைகள் முழுவதும் மூடப்படுவதால், இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
**-வினிதா**
�,