12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (மே 10) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா, தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். பிளஸ் 2 தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலம் என்பதால் அதற்கேற்ற வகையில் முடிவு எடுக்கப்படும். முடிந்தவரை மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்.
மாணவர்கள் நேரடியாக தேர்வை எழுத முடியாத நிலை இருக்கிறது. அறிகுறி இல்லாமலேயே வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. கேரள மாநிலத்தில் 10,12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்பட்டுவிட்டது.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை, அப்படியில்லை. செய்முறைத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் தேர்வு நடத்துவது குறித்துப் பேச உள்ளோம். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளை, கருத்துகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல உள்ளேன். முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைப் பொறுத்தவரை முந்தைய தேர்வுகள், அகமதிப்பீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,