டி.எஸ்.எஸ்.மணி
கேரள மாநில கம்யூனிஸ்ட் வரலாற்றில், புரட்சிகரப் போராட்ட வரலாற்றில், தோழர் K..R. கெளரி ஒரு தியாகத்தாய். தான் பாடுபட்டு, உழைத்த கட்சியாலேயே, தன்னை வளர்த்த கட்சியாலேயே, அதிகார மனோபாவம் கொண்ட சுயநலமிகளால், ஓரங்கட்டப்பட்ட போதும், நசுக்கப்படும், ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் போய்விழுந்து, எழுந்த ஒரு நூற்றாண்டு வாழ்நாள் கழித்த, முன்மாதிரி. வாழ்ந்த காலத்தில் தூற்றியவரெல்லாம், மறைந்த பின்பு போற்றுவார் என்ற மந்திரம் தெரியாத கேரள மங்கை. ஓரங்கட்டப்பட்ட ஈழவர் சமூகத்தில் உதித்த நன்முத்து. ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தனது அண்ணனது செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு, இணைந்து, புரட்சிகர நடவடிக்கைகளுக்காக, பலமுறை சிறை சென்றவர்.
பலமுறை காவல்துறையால், கடுமையாக சித்தரவதை செய்யப்பட்டார். காவலர்களின் லத்திகளுக்கு உயிர் இருந்திருக்குமானால், எத்ததனையோ லத்திகளை பிள்ளைகளாகப் பெற்றிருப்பேன் என்று காவல்துறையின் கொடிய சித்தரவதையை படம் பிடித்துக் காட்டியவர்.. 1957 ன் ஈ.எம்.எஸ். முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சர். இன்னொரு அமைச்சரான இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த, தோழர் T.V.தாமஸ் உடன் திருமணம்.
1960- 1984 கட்சி தலைமையிலான, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் 1964 ல் கட்சி இரண்டாக உடைந்த போது, கெளரி, சிபிஎம் வந்தார். தாமஸ் சிபிஐ யில் நின்று விட்டார். தம்பதிகள், வெவ்வேறு வீடுகளில் குடியேறினர். தம்பதி உறவு கட்சி பேதத்தால் முறிந்தது. 1967 ல் ஈஎம்எஸ் அமைச்சரவையில், நிலச்சீர்திருத்த அமைச்சர். அப்போது அவர் கொண்டு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டம், கேரள நிலமற்ற உழவர்களுக்கு வாழ்க்கை தந்தது.1967 முதல் 1976வரை, கட்சி தலைமையிலான கேரள மகளிர் சங்கத் தலைவர். 1976–1987 வரை கட்சி தலைமையிலான கேரள மகளிர் சங்கச் செயலாளர் . 1980 ம் ஆண்டு, ஈ.கே.நாயனாரின் முதல் அமைச்சரவயில், அமைச்சர். 1987 தேர்தலில், தியாகத் தோழர் கே.ஆர்.கெளரியை முதலமைச்சராக்குவோம் என்று பரப்புரை செய்து, மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ஆட்சி கிடைத்ததும், செல்வாக்கு பெற்ற சமூகத்தைச் சார்ந்த, ஈ.கே.நாயனாரை முதலமைச்சராக்கியது. அந்த அமைச்சரவையிலும் கெளரி ஒரு அமைச்சர். ஆனாலும், கட்சித் தலைமையுடன் உள்ள உரசல், விரிசல் ஆனது. 1994 ல் சிபிஎம் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். வெளியே வந்தவர், ஜனாதிபத்திய சம்ரக்ஷ சமிதி” என்ற ஒடுக்கப்பட மக்களுக்கான அமைப்பை, கட்சியை 1994 லேயே, உருவாக்கினார்.அந்த கட்சி, சிபிஎம் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணியை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான, ” ஐக்கிய ஜனநாயக முன்னணி” யில் கூட்டணியாக சேர்ந்து, தேர்தல் களம் கண்டது. அதன் விளைவாக, 2001 ல் ஏ.கே.அந்தோணி முதல் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமரும்போது, கெளரி அதில் ஒரு அமைச்சரானார். 2004 ல், அந்தோணி திடீர் ராஜினாமா செய்ய, உம்மன் சாண்டி முதல்வரானார்.2001–2006 வரை கெளரி அந்த அமைச்சரவையில், அமைச்சராக இருந்தார். இப்போது 2021, மே 11 ல், தனது 103 வயதில் மறைந்தார். உடனே கேரள சிபிஎம், பினராய் விஜயன் உட்பட, கெளரியின் தியாகத்தை, கம்யூனிஸ்ட் வரலாற்றில் பதித்த முத்திரைகளை, பெருமையாகப் புகழ்கின்றனர். மறைந்த பிறகு, பலரும் தைரியமாக, மறைந்த பெருந்தகைக்கு ” உரிமை” கோரிக் கொள்வார்கள் என்பது இதுதானோ! தோழர் கெளரியே!, கேரள ஆண்கள், உன்னை உளமாற ஏற்காவிட்டாலும், கேரளப் பெண்கள் உன்னை ” முன்மாதிரியாக- Role Model “ஆகக் கொண்டால் மட்டுமே கேரளம் பிழைக்கும்.
.�,”