yஇன்று முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!

politics

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,

“15.05.2021 காலை 4 மணி முதல் 24.05.2021 காலை 4 மணி வரை ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

**புதிய கட்டுப்பாடுகள்**

தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் பங்க்குகள் ஆகியவை எப்போதும் போலச் செயல்படும்.

ஆங்கில மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் திறக்க வழக்கம்போல் அனுமதிக்கப்படும்

பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க அதிக தூரம் பயணிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு செல்ல முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள்.

காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.

தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்படும்.

* இ-பதிவு முறை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ- பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் (16.05.2021 மற்றும் 23.05.2021) அமல்படுத்தப்படும்.

மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால், இந்தக் கடைகளைப் பல்வேறு இடங்களுக்குப் பரவலாக மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நேற்று (13.05.2021) நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தவாறு, காவல் துறையினர், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவேண்டும்.

பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *