புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை முதல்வரை நியமிக்க பாஜக முயன்று வரும் நிலையில், அப்பதவி உருவாக்கத்துக்கு முதல்வர் ரங்கசாமி சம்மதிக்காமல் கறாராக இருந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி 17 நாட்கள் கடந்துவிட்டது. முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகிவிட்டது. இருந்தபோதிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் இன்னும் பதவி ஏற்கவில்லை. இதனிடையே கடந்த 10ஆம் தேதி பாஜக சார்பில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதை துணைநிலை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், புதுச்சேரியில் துணை முதல்வர் பதவியைக் கேட்டுத் தொடர்ந்து கோரிக்கையை வைத்து வருகிறது பாஜக . ஆனால் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, புதுச்சேரியில் புதியதாகத் துணை முதல்வர் என்ற பதவியை உருவாக்க முடியாது என்று மறுத்து வருகிறார்.
வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்ள தற்காலிக சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ, லட்சுமிநாராயணனை, துணை நிலை ஆளுநருக்குப் பரிந்துரை செய்திருந்தார் முதல்வர். அந்த பரிந்துரையைத் துணைநிலை ஆளுநர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குத் தடைபோடுவது பாஜக தலைமைதான் என்கிறார்கள் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில்.
இதுகுறித்து பாஜக தரப்பில் விசாரித்தோம், “எதிர்காலத்தில் புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் திட்டம் உள்ளது. பாஜகவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி முக்கியம் என்பதால், எம்.எல்.ஏ,க்கள் பலத்துக்காக நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியை உருவாக்கினோம். அந்த தகவல் முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும்” என்றனர்.
மேலும், “இன்னும் நான்கு நாட்களில் முதல்வர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு சுமுகமாக, வரும் 24, 25 தேதிகளில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்வார்கள், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொள்வார்கள்” என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
**-வணங்காமுடி**
�,