tவிரைவில் டாஸ்மாக் திறப்பு: மது விலை உயர்வு!

politics

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், அடுத்த கட்ட ஊரடங்கை இப்போது இருப்பதை விட தளர்வுகளோடு நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதில் முக்கிய அம்சமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறிப்பிட்ட மணி நேரம் திறப்பது என்ற தளர்வும் இடம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகியவற்றில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. இதனால் தமிழகத்தின் குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மது வகைகளை வாங்கிக் குடிக்கின்றனர். சிலர் தங்களுக்கு வேண்டிய மதுவை மட்டும் அங்கே சென்று அருந்திவிட்டு வரும் நிலையில் மேலும் சிலர் அண்டை மாநிலங்களில் இருந்து மது பாட்டில்களை சட்ட விரோதமாக தமிழகத்துக்குக் கொண்டுவந்து இங்கே அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். அண்மையில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஊழியருடைய டூவிலரில் கர்நாடக மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்தது. அதேநேரம் எவ்வளவு விலை கொடுத்தும் மதுவை வாங்கிக் குடிக்க பலர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் எதார்த்தம்.

“கொரோனா புண்ணியத்தில் 880 ரூபாய் எம்.ஆர்.பி. உடைய ’சிக்னேச்சர் விஸ்கி சென்னையில் நேற்று 3000 ரூபாய். ஒரு வாரத்தில் 5000 ரூபாயை தொடும் என்கிறார்கள். தென் மாவட்டங்களில் கள்ளசாராய விற்பனைக்கும் குறைச்சல் இல்லை. என்ன நடவடிக்கை எடுக்க போகிறது அரசு?” என்று குடிமகன்கள் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு கோரிக்கை வைக்கும் அளவுக்கு தமிழகத்தில் மது தாகம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது சப்ளை செய்யும் மதுபான ஆலை உரிமையாளர்கள், ‘ ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு வருடமாக மது கொள்முதல் குறைந்துவிட்டது. டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கி ப்ளாக் மார்க்கெட்டில் விற்பவர்கள்தான் அதிகரித்துள்ளனர். அதனால் அரசு மது கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்’ என்று ஆட்சி மேலிடத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதை பரிசீலித்து அரசும் டாஸ்மாக் மதுபான கொள் முதல் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. மது ஆலைகளுக்குக் கொடுக்கும் கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் தானாகவே டாஸ்மாக் மதுபான விற்பனை விலையும் உயரும்.

எனவே அடுத்த கட்ட ஊரடங்குத் தளர்வில் டாஸ்மாக் திறப்பு என்ற முடிவெடுக்கப்படும் அதேநேரம், மது பான விலைகளையும் குறிப்பிட்ட அளவு உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. எனவே விரைவில் டாஸ்மாக் திறப்பு என்ற அறிவிப்பும் மது பான விலைகள் அதிகரிப்பு என்ற அறிவிப்பும் ஒன்றன் பின் ஒன்றாக வரலாம்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *