முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி 2011 -13 ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் மகேந்திரன் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநராயணன்,
ஹேமலதா ஆகியோர் இருவேறுபட்ட தீர்ப்புகளை கூறினார்கள். அதாவது ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று சங்கரநாராயணன் தீர்ப்பளிக்க…இவ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து எந்த பயனும் இல்லை ஹேமலதா தீர்ப்பளித்தார்.
இதை அடுத்து வழக்கு தலைமை நீதிபதியால் மூன்றாவது நீதிபதியான நிர்மல்குமாரிடம் மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
இடையே இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியிடம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு மீறி 73 சதவீதம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்வதில் எந்த தடையும் இல்லை” என்று தெரிவித்தார்.
அப் போது ராஜேந்திரபாலாஜி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் அதுவரை இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது
அப்போது ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி நிர்மல் குமார் விசாரித்து தீர்ப்பு சொல்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதுதொடர்பாக தமிழக அரசின் பதிலையும் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
**-வேந்தன்**�,”