போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தீபாவளியை ஒட்டி ஆண்டுதோறும் இனிப்புகள் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஸ்வீட்களை வாங்க விடப்படும் டெண்டர்களில் பங்குபெற குறைந்தபட்சம் ரூ.100 கோடி டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற வேண்டும் என விதிமுறைகள் திருத்தப்பட்டது.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில், [ ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்](https://minnambalam.com/politics/2021/10/21/13/deepavali-tamilnadu-transport-corporation-sweet-tender-minister-rajakannappan) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நமது செய்தியின் எதிரொலியாக, ‘போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு வாங்கக்கூடிய ஸ்வீட் ஆவினில் வாங்கட்டும், அரசுத் துறையினர் அனைவரும் ஆவின் நிறுவனத்தில் ஸ்வீட் வாங்கவேண்டும்’ என்று முதல்வர் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார்.
ஸ்வீட்கள் ஆவினில் தான் வாங்க வேண்டும் என்ற உத்தரவால் இந்த ஆண்டு ஆவினில் ஸ்வீட் விற்பனை 82சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் நாசர், “ மின்னம்பலம் பத்திரிகையாலும், முதல்வர் உத்தரவாலும் ஆவின் நிறுவனத்தின் ஸ்வீட் விற்பனை உயர்ந்துள்ளது. அரசுத் துறைகளிலிருந்து இதுவரையில் 70 டன் ஸ்வீட் ஆர்டர் கிடைத்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அது நூறு டன்னாக உயரும் என எதிர்பார்க்கிறோம். ஆவினில் தான் ஸ்வீட் வாங்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதால் ஆவின் மேலும் நன்றாக வளரும், அதனுடைய ஊழியர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். [இதற்காக உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.](https://minnambalam.com/k/2021/10/28/17).
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் மின்னம்பலத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதன் பொதுச்செயலாளர், ஆறுமுக நயினார் தொழிலாளர்கள் சார்பாக நமக்கு அனுப்பிய கடிதத்தில், “ தங்களுக்கும், தங்களது ஊழியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளியை ஓட்டி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு ஆவின் நிறுவனம் மூலம் தரமான இனிப்பு வழங்கப்படுகிறது. இந்த இனிப்பு வழங்குவதற்கு மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த செய்தி முக்கியமான காரணமாக இருந்தது. அதற்காகப் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் தங்களது இதழுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**
�,”