அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, மீண்டும் அதிமுகவை மீட்பேன் என்று கூறி அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (டிசம்பர் 6) அவர், நடிகர் ரஜினி காந்த்தை சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
2021 அக்டோபர் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதை வாங்கிக் கொண்டு, குடியரசுத் தலைவர், பிரதமரைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்தினருடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்தார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், [மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டு வீடு திரும்பினார்.](https://minnambalam.com/politics/2021/10/31/24/rajini-brain-attack-medical-struggle-kaveri-hospital-transient-%20ischemic-%20attack)
இந்த சூழலில் நேற்று (டிசம்பர் 6) மாலை ரஜினிகாந்த்தை அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் சசிகலா. அப்போது, ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்த சசிகலா தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு விருது கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார்.
ரஜினியை சந்தித்தது குறித்து சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஜினி உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும், விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில்களில் தரிசனம், தொண்டர்களிடம் பேசுதல், ஆடியோ வெளியிடுதல், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், அறிக்கை வெளியிடுதல் என பரபரப்பை ஏற்படுத்தி வரும் சசிகலா, தற்போது பல கோடி ரசிகர்களை கொண்ட ரஜினியை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
**-பிரியா**
�,