2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 800க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்றைய நிலவரப்படி, 3,33,533 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ளது. 21,87,205 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக 525 பேர் உட்பட 4,89,409 பேர் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் நாடாளுமன்ற ஊழியர்கள் 800க்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும், ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், ராஜ்யசபா செயலகத்தைச் சேர்ந்த 271 பேர் உட்பட 875 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜ்யசபா அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதோடு ஒரு வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் வெங்கையா நாயுடு.
இந்த சூழலில் திட்டமிட்டபடி, ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
**-பிரியா**
�,