�
வருமான வரித்துறை நடத்திய சோதனையில் வேலம்மாள் கல்வி குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை ஆணையர் சுரபி அகுவாலியா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் முக்கிய கல்வி நிறுவனமாக இருந்து வருகிறது வேலம்மாள் கல்வி குழுமம். காஞ்சிபுரம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை வேலம்மாள் கல்விக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் அதிகமாக டொனேஷன் வசூலித்தது, வரி ஏய்ப்பு என இக்குழுமம் மீது வருமான வரித்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வேலம்மாள் தொடர்புடைய 64 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தது. முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில் தற்போது வேலம்மாள் குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வேலம்மாள் நிறுவனர் முத்துராமலிங்கம் செகரட்டரி மற்றும் கேஷியர் ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், வேலம்மாள் குழுமம் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலம்மாள் கல்வி நிறுவனம் பல்வேறு பள்ளிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்ததும் இந்த சோதனைக்கு வழிவகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
�,”