விழுப்புரத்தில் கொரோனா தொற்றால் இன்று (ஏப்ரல் 4) ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான்(51), வ .பகண்டை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் டெல்லி தப்லீக் மாநாட்டுக்குச் சென்று வந்ததையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மூச்சுத் திணறல் மற்றும் அதிக உடல் எடை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கொரோனா உறுதி செய்யப்பட்ட 51 வயது ஆண், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு (ஏப்ரல் 3) மூச்சுத்திணறல் அதிகமானதில், இன்று காலை 7.44 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்திருக்கிறது.
விழுப்புரத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 12 பேரும், பழைய அரசு மருத்துவமனையில் 25 பேரும் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குச் சோதனை எடுக்கப்பட்டு இன்னும் முடிவு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
**-கவிபிரியா**�,”