ஹாரிபாட்டர் எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங் தான் கொரானாவிலிருந்து மீண்டு வந்த ரகசியத்தை தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகத்தை தன் பிடிக்குள் கொண்டு வந்து இயங்காநிலையில் வைத்துள்ளது. மேலும் எந்த பாகுபாடும் காட்டாத இந்த வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. உலகில் உள்ள எல்லோரையும் ஒரே கூரையின் கீழ் வைத்துள்ள இந்த கொரோனா, பிரபலங்களையும் விட்டுவைக்காதது ஆச்சரியமல்ல. டாம் ஹாங்க்ஸ், இட்ரிஸ் ஆல்பா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், உலகப் புகழ்பெற்ற ஹாரிபாட்டர் புதினத்தை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங்கும் இதனால் பாதிப்படைந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அறிகுறிகள் தனக்கு இருந்ததாகவும், இப்போது முழுமையாக தான் குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார் இவர். மேலும், உலகெங்கிலும் பதிமூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொரோனா தொற்றுநோயின் அறிகுறிகளிலிருந்து மீள உதவும் ஒரு நுட்பத்தைப் தான் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக கூறிய ஜே.கே. ரெளலிங், ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளார்.
ரெளலிங் தனது ட்விட்டர் கணக்கில், கடந்த 2 வாரங்களாக எனக்கு கொரோனாவின் அனைத்து அறிகுறிகளும் இருந்தன. ஆனால், நான் அதற்கான சோதனைகளை எடுத்துக்கொள்ளவில்லை. எனது கணவர் மருத்துவர் என்பதால் அவரது அறிவுரையின் கீழ் இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டுவந்தேன்” என்று கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்தில் மருத்துவராக இருக்கும் அவரது கணவரால் பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு சுவாசப் பயிற்சியின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
Please watch this doc from Queens Hospital explain how to relieve respiratory symptoms. For last 2 weeks I’ve had all symptoms of C19 (tho haven’t been tested) & did this on doc husband’s advice. I’m fully recovered & technique helped a lot.https://t.co/xo8AansUvc via @YouTube
— J.K. Rowling (@jk_rowling) April 6, 2020
நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் இதனை பின்பற்றினால் ஆரம்பத்திலேயே இதிலிருந்து மீள வழிவகுக்கும் என்பதை வீடியோவில் உள்ள மருத்துவர் விளக்கினார். இதைப் பற்றிக் கூறும் ஜே.கே.ரெளலிங், “இந்த பயிற்சியை செய்ய செலவில்லை. மோசமான பக்க விளைவுகள் எதுவும் இல்லை. ஆனால் இது என்னைப் போலவே உங்களுக்கு / உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நிறைய உதவக்கூடும்” எனக் கூறியுள்ளார்.
ரெளலிங் மருத்துவமனைக்கு செல்லாவிட்டாலும், மருத்துவரான அவரது கணவரின் கண்காணிப்பிலும் அறிவுரையின் பேரிலும் பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
**-முகேஷ் சுப்பிரமணியம்**
�,”