ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே சர்வதேச விமானங்கள் இயக்குவது குறித்து முயற்சி மேற்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் பூரி கூறியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு தளர்வுகளில் ஒன்றாக உள்நாட்டு விமான போக்குவரத்து இந்தவாரம் அறிவிக்கப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளது. இந்நிலையில் ”ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவிலான வெளிநாட்டு விமான போக்குவரத்தை துவங்குவதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று பேஸ்புக்கில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஹர்தீப் பூரி பதிலளித்துள்ளார்.
”என்று விமான சேவைகள் துவங்கும் என்று ஒரு குறிப்பிட்ட தேதியை தற்போதைக்கு கொடுக்க இயலாது. ஆனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் சேவைகள் துவக்கலாம். இன்னும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் அதற்கு முன்னதாக கூட சூழ்நிலையை பொறுத்து விமானங்கள் இயக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
சுய விருப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் பட்சத்தில் பயணிகள் ஆரோக்கிய சேது செயலி இல்லாமலும் விமானத்தில் பயணிக்கலாம் என்று கூறிய அமைச்சர், மே மாதம் ஏழாம் தேதி துவங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்த மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருக்கும் 50,000 இந்தியர்கள் மீண்டும் நாடு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளின் விலையை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதிகமாக வரும் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
** – பவித்ரா குமரேசன்**�,