மாணவர்களின் நலன் கருதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யப் பல்கலைக்கழக மானியக் குழு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்குப் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்து வருகிறது. ஜூலை 1ஆம் தேதி நடைபெற உள்ள சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கல்லூரி தேர்வுகளை நடத்துவது தொடர்பாக எந்தவித அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் தற்போது, மாணவர்களின் நலன் கருதி இறுதியாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யலாம் என்று யுஜிசி பரிந்துரைத்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில், மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி யுஜிசியின் முந்தைய வழிகாட்டுதல்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழு ஏற்கனவே இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வை ஜூலையில் நடத்தவும் மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவை இன்டர்னல் அஸஸ்மென்ட் அல்லது முடிந்தவரை தேர்வை நடத்தி மதிப்பெண் வழங்கவும் பரிந்துரைத்தது. அதோடு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்கவும் பரிந்துரை செய்தது.
தற்போது இவை மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மாணவர்களின் உடல்நலனில் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செமஸ்டர் தேர்வுகள் மற்றும் உள் மதிப்பீடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கலாம் என்றும் இதனால் மதிப்பெண் குறைவாகப் பெறும் சூழ்நிலையில் அந்த மாணவர்கள் விருப்பத்தின்பேரில் ஊரடங்குக்குப் பின்னர் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்கலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது. அதுபோன்று புதிய கல்வி ஆண்டை வரும் செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
**-கவிபிரியா**�,