சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஜூலை 5) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று பெட்ரோல் பங்குகள் இயங்காது. நாளை (ஜூலை 6) திங்கட்கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாளை (ஜூலை 6) திங்கட்கிழமை முதல் முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பெட்ரோல் பங்குகளில் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை மேம்பாட்டு போன்ற நிகழ்ச்சிகளை நடந்த வேண்டாம் எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முழு முடக்கம் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு நேற்று (ஜூலை 4) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 5) நள்ளிரவு 12 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலம் முடியும் வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் இனி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்றும் பால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
**- ராஜ்**�,