தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசுத் துறைகளில் 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயனளிப்பு ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனக் கடந்த 17 வருடங்களாகக் கடுமையான போராட்டங்களை ஜாக்டோ ஜியோவினர் நடத்தி வருகிறார்கள்
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நேரத்தில் அரசு ஊழியர்கள் உயிரைப் பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி 2020 ஜூலை 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, ஒரு அறிக்கையை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகைக்கு அளித்தது. அதில், “ஓய்வூதியம் என்பது தானமோ தர்மமோ அல்லது விருப்பப்பட்டு வழங்கப்படும் வெகுமதியோ அல்ல.
1948இல் டிசம்பர் 10ஆம் தேதி, ஐநா சபையால் வெளியிடப்பட்டு, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு 24 (1) மற்றும் பிரிவு 25ன் படி ஓய்வூதியம் ஒரு அடிப்படை உரிமையாகும்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 309 மற்றும் 148 பிரிவு 31(1) பிரிவு 19 (1) எஃப் ஆகியவற்றின் படியும் ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு ஊழியரின் சொத்துரிமை ஆகும். மேலும் அது அவர்களது பணிக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கொடுக்கப்படா ஊதியம் ஆகும். சங்க நிர்வாகிகள் தற்போது நடத்த விருக்கும் போராட்டம் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-எம்.பி.காசி**�,