பப்ஜி செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திரு.வி.க நகரில் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு கப சுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் இன்று (ஜூலை 13) வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “இலவச இ-பாஸ் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தென்மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடமாடும் காய்ச்சல் முகாம் மூலம் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று விளக்கினார்.
சீன செயலிகள் தடை செய்யப்பட்டது குறித்து உதயகுமாரிடம் கேட்கப்பட்டபோது, “சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். தொடர்ந்து இளைஞர்களை சீரழித்து வரும் பப்ஜி விளையாட்டையும் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம்” என்று பதிலளித்தார். மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதாகக் கூறி பப்ஜி செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்த நிலையில் இவ்வாறு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இருநாட்டு எல்லை மோதல்களைத் தொடர்ந்து டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29ஆம் தேதி அறிவித்தது.சீனாவையும், சீன நாட்டு பொருட்களையும் இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,