ஜெயராஜ், பென்னிக்ஸ்: நிஜ போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

public

சாத்தான்குளம் காவல் நிலைய காவலர்களால், தந்தை மகன் இருவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் ஏற்பட்ட மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார்கள்.

செல்போன் கடையை ஊரடங்கு அனுமதித்திருந்த நேரத்துக்கும் அதிகமாகத் திறந்திருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து போலீசாரால் சாத்தான்குளம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார் செல்போன்கடை வைத்திருந்த ஜெயராஜ். அவரைத் தேடி அவரது மகன் பென்னிக்ஸும் காவல்நிலையம் சென்றார். ஜூன் 19 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு கோவில்பட்டி மருத்துவமனையில் பென்னிக்ஸும், சிறையில் ஜெயராஜும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். சாத்தான்குளம் முதல் ஐ.நா. சபை வரை உலுக்கிய இந்த மரண விவகாரத்தை மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. அதன்படி விசாரிக்க வந்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, போலீசார் மரியாதைக் குறைவாக நடத்தியதாக உயர் நீதிமன்றமே கண்டித்தது.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் பாலகிருஷ்ணன், முத்துகணேஷ் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்கு முதலில் அரசு உத்தரவிட்ட நிலையில் சிபிஐ கையிலெடுக்கும் வரை விசாரணையில் தாமதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் முக்கிய திருப்பமாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ரேவதி என்ற பெண் காவலர் சாட்சியாக மாறினார். காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகளை எல்லாம் ரேவதியே வாக்குமூலமாக தெரிவிக்க, இந்த வழக்கு உறுதியானது. உயர்நீதிமன்ற நீதிபதிகளே ரேவதிக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பாராட்டுகளை தெரிவித்தார்கள். அந்த சூழலில் சிபிஐ விசாரணை தொடங்கியது.

**பிரேதப் பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது?**

விசாரணை பற்றி சிபிஐ வட்டாரத்தில் பேசினோம்.

“ஏடிஎஸ்பி கலைமணி தலைமையில், டெல்லியைச் சேர்ந்த டிஎஸ்பி வி.கே. விஜயகுமார் சுக்லா விசாரணை அதிகாரியாகக் களத்தில் இறங்கினர். ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுள்ளார் சிபிஐ ஏடிஎஸ்பி கலைமணி. அந்த அறிக்கையில், கை, கால், உள்ளங்கை, உள்ளங்கால், முதுகு, பின் பகுதிகளில் லத்தியால் தாக்கப்பட்டிருப்பதையும், வயிறு, நெஞ்சு, கன்னப் பகுதியில் கையால் தாக்கப்பட்டிருப்பதையும் பதிவுசெய்துள்ளார் டாக்டர். மேலும் உடல் முழுக்க காயத்தின் அடையாளங்கள் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஜெயராஜுக்கு சுகர், பிரஷர் இருந்ததும், அதற்கு மாத்திரை எடுத்து வந்ததும், பென்னிக்ஸுக்கு, சிறிய அளவிலான இதய பிரச்சினை இருந்ததும் தெரியவந்துள்ளது.

**குற்றப் பத்திரிகை எப்போது?**

சிபிசிஐடி போலீஸார் கொடுத்த ரிப்போர்ட்டும், சிபிஐ விசாரணை செய்ததும் பெரும்பாலும் ஒத்துப் போகிறது என்கிறார்கள் சிபிஐ போலீஸார். சிபிஐ விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட விபரங்களை வைத்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அது நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக இருக்கும் ” என்று சொல்கிறார்கள் சிபிஐ தரப்பில்.

**-வணங்காமுடி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *