பெங்களூரில் கொரோனாவில் இருந்து மீண்ட வாலிபர் பிளாஸ்மா தானம் செய்து டாக்டர் உட்பட ஆறு பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பெங்களூரு ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது குணால் கானா. இவர் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எட்டின்பர்க் பல்கலைக்கழகத்தில் தொழில் மேலாண்மை படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாத இறுதியில் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து குணால் பெங்களூருக்குத் திரும்பினார். பின்னர் அவர் வீட்டுத் தனிமையில் இருந்தார். இந்த நிலையில் குணால் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கே.ஜி.அரசு ஆஸ்பத்திரியில் குணால் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பயனாக குணால் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் குணாலிடம் அவரது நண்பர்கள் பிளாஸ்மா தானம் அளித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதனால் பிளாஸ்மா தானம் செய்வதற்கு குணால் முன்வந்தார். இதுபற்றி அறிந்த கே.ஜி.அரசு மருத்துவமனை டாக்டர்கள், பிளாஸ்மா தானம் செய்யும்படி குணாலிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி முதன்முறையாக குணால் பிளாஸ்மா தானம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயதேவா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் இதய மருத்துவ நிபுணரான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்து ஆஸ்பத்திரி நிர்வாகம், குணாலைத் தொடர்புகொண்டது அதன்பேரில் அவர் இரண்டாவது முறையாக கடந்த ஜூலை மாத இறுதியில் பிளாஸ்மா தானம் செய்தார். அவரிடம் இருந்து பெற்ற பிளாஸ்மா மூலம் தற்போது டாக்டர் உள்பட ஆறு கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பிளாஸ்மா தானம் கொடுத்து தனது உயிரைக் காப்பாற்றியதற்காக குணாலுக்கு, ஜெயதேவா அரசு ஆஸ்பத்திரியின் இதய மருத்துவ நிபுணர் வீடியோ கால் மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
**ராஜ்**�,