4
பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை மோகன் மீது கந்துவட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மகளின் கல்வி செலவுக்காகச் சேமித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செலவழித்தார் மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன்.
இவரது செயலை பாராட்டி மே மாதம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து அவரது வீட்டுக்கு பாஜகவினர் சென்று பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இம்மாத தொடக்கத்தில், பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் தனது குடும்பத்தினருடன் மோகன் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது மோகன் மீது கந்துவட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அண்ணாநகர் அன்பு நகரைச் சேர்ந்தவர் சேங்கை ராஜன்(50). இவர், கடந்த 13ஆம் தேதி மோகனிடம் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை வட்டியுடன் திருப்பி அடைத்து விட்டபோதும் தன்னிடம் கூடுதல் வட்டி கேட்டு மோகன் மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணைக்கு வருமாறு அண்ணாநகர் காவல் துறையினர் மோகனை அழைத்துள்ளனர். ஆனால் அவர் விசாரணைக்கு நேரில்
ஆஜராகவில்லை.
இந்நிலையில் மோகன் மீது கந்துவட்டி சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மோகன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
**-கவிபிரியா**�,