மெரினாவில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி?: உயர் நீதிமன்றம் கேள்வி!

public

சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என்பது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 21ஆம் தேதி 3 மணி முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வணிக வளாகங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கடற்கரைகளுக்குச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. எனினும், மெரினா கடற்கரைக்கு மக்கள் சென்ற வண்ணம் இருந்த நிலையில், அனுமதியை மீறி கடற்கரையின் மணல் பரப்புக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து வந்தனர். இதனால் மக்கள் பட்டினம்பாக்கம் கடற்கரையோரப் பகுதிகளில் குவியத் தொடங்கினர்.

இதனிடையே, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர் நலன் அமைப்பைச் சேர்ந்த பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மெரினா கடற்கரையைச் சுத்தமாகப் பராமரிப்பது மற்றும் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடியை முறைப்படுத்துவது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கு மீண்டும் இன்று(செப்டம்பர் 29) நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரடங்கில் பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரையில் பொது மக்களை அனுமதிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அழுத்தம் தர முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதே சமயம் பொது மக்களை அனுமதிப்பது தொடர்பாகத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அக்டோபர் 5ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட கடைகளுக்குப் பதிலாக புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த பணிகள் எந்த அளவில் உள்ளன என்பதைப் பற்றியும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *