தமிழக காவல்துறையில் ஆளிநர்களாக இருக்கும் போலீசார் ஆன்லைன் சூதாட்ட போதையில் சிக்கி பணத்தை இழந்து சீரழிந்து வருவதை அறிந்த காவல்துறை சிறப்பு சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஒரு சுற்றறிக்கை குறிப்பாணை அனுப்பியுள்ளார். காவல்துறை இயக்குனர் அலுவலகம் என்ற முகவரியிலிருந்து, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், அனைத்து மண்டல காவல் துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அது அனுப்பப்பட்டுள்ளது.
அதில் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் குறிப்பாக ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் ஆன்லைன் கேம்பலிங் என்னும் மோசமான சூதாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த சூதாட்டமானது கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சில முதலாளிகளால் ஆரம்பிக்கப்படடிருக்கிறது. இந்த சூதாட்டமானது ஒரு பெரிய மாயவலை.
முதலில் ஜெயிப்பதுபோல் தோன்றி பிறகு அனைத்தையும் இழந்து பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டு, அதனால் பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பு, பண இழப்பு மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகி தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தவிக்கவிட்டுக் கொண்டு இருக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இனிவரும் காலங்களில் இதுபோன்று காவலர்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க அவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் கவாத்தின் (parade) போதும், காவல் நிலையம் ரோல்காலின் போதும் சரியான அறிவுரை வழங்கி, கண்ணியமிக்க நமது காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள், இனி எந்த விதமான பாதிப்புக்குள்ளாகாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் முதல் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் வரையில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறி, எடுக்கப்பட்ட நடவடிக்கையினை புகைப்படங்களுடன் மண்டல காவல்துறை காவல் தலைவர்கள் மற்றும் காவல் ஆணையர்கள் மூலமாக 2020 டிசம்பர் 3ஆம் தேதிக்குள் டிஜிபி கட்டுப்பாட்டு அறை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதனால் கடந்த சில வாரங்களாக உயர் அதிகாரிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வேலை பார்க்கும் ஆளிநர்கள் அன்றாடம் நடைபெறும் பதவிகளில் ஆஜராகி வருகின்றனர்.
*வணங்காமுடி*�,