டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்: புதிய கட்டுப்பாடுகள்!

public

போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை டிஎன்பிஎஸ்சி விதித்துள்ளது.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுரைகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்களின் நலன் மற்றும் தேர்வின்போது தவறு நடைபெறாமல் இருப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

அதில், “தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்குத் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டு காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.

விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.

விடைத்தாளில் A, B, C, D மற்றும் (E) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரியக் கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இந்த எண்ணிக்கை தவறாகும்பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணிலிருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும்.

ஆதலால் இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இச்செயலை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.

மேற்கூறிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 3ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு, ஜனவரி 9,10ஆம் தேதிகளில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *