சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுத் தேதிகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார்.
கொரோனாவால் இந்த கல்வியாண்டில் மாணவர்கள் ஆன்லைனில் பாடம் கற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழத் தொடங்கிய நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும். 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று காரணமாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் இதுவரை சந்திக்காத நிச்சயமற்ற சூழ்நிலையைச் சந்திப்பதாகவும், ஆனால், மாணவர்கள் தங்கள் படிப்பில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக ஆசிரியர்கள் அயராது உழைத்துள்ளனர் என்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், டிஜிட்டல் முறையில் கல்வி கற்பதற்கான தளத்தை வழங்க அரசும் பல நடவடிக்கைகள் எடுத்ததாக கூறியுள்ளார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தெரிவித்த ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வு தேதிகள் குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
**-பிரியா**�,