கிச்சன் கீர்த்தனா: சில்லி சோயா

மெனோபாஸ் காலக்கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைய ஆரம்பித்து, சினைப்பைகளின் செயல்திறனும் மங்கும் நிலையில் வாரத்தில் சில நாட்கள் சோயா உணவுகளை எடுத்துக்கொண்டால் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஏற்றது இந்த சில்லி சோயா.
என்ன தேவை?
சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - 20
தக்காளி விழுது - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தக்காளி, குடமிளகாய் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்துத் கொதிக்கவிட்டு இறக்கவும். அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடியவிடவும். உருண்டைகளை இரண்டாக நறுக்கவும். இதனுடன் தக்காளி விழுது, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்துப் பிசிறவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, பிசிறிய சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பொரித்த சோயா உருண்டைகள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, சில நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.