கொரோனா பரவல் அதிகரித்து வருவதனால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 13 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிறப்பித்த உத்தரவில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கிறோம். இந்த தடை ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
நியூசிலாந்து அதன் எல்லைக்குள் கிட்டதட்ட வைரஸ் இல்லாமல் அகற்றப்பட்டது. சுமார் 40 நாட்கள் வரை எந்தவொரு சமூக பரவலும் உள்நாட்டில் இல்லை. ஆனால், சமீபத்தில் பரிசோதனையில் அதிக நோய் தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன. அதில், பெரும்பான்மை இந்தியாவிலிருந்து வந்த பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 7 என்ற அளவில் இருந்து கொண்டே இருக்கிறது.
அதனால், இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள், சொந்த குடிமக்கள் உள்பட, அனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மட்டும் ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,