வாழ்க்கையில் கசப்பு, இனிப்பு என்று எல்லாமே இருக்கும். இதை உணர்த்த கசப்பு, இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உப்பு, காரம் சேர்த்து இந்தப் பச்சடியை தமிழ்ப் புத்தாண்டில் தயாரித்து வருவது நமது வழக்கத்தில் உள்ளது. வாழ்க்கைத் தத்துவத்தை எளிதாக உணர்த்துவதால் இதற்குத் ‘தத்துவப் பச்சடி’ என்கிற பெயரும் இருக்கிறது. சித்திரை திருநாளில் இந்த பச்சடியைச் சுவைக்க மறந்தவர்கள், இன்றைக்கு செய்து ருசிக்கலாம்.
**என்ன தேவை?**
மாங்காய் – ஒன்று
வேப்பம்பூ (காய்ந்தது) – ஒரு கைப்பிடி அளவு
பொடித்த வெல்லம் – 100 கிராம்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – ஒன்று
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
மாங்காயைத் தோல் சீவி நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். தேங்காய், பச்சை மிளகாயைச் சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, வேப்பம்பூவைச் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு வேகவைத்த மாங்காயுடன் தாளித்த கடுகு – வேப்பம்பூவைச் சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுதை இதனுடன் சேர்க்கவும். பொடித்த வெல்லத்தையும் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: கோகீஸ் – இலங்கை](https://www.minnambalam.com/public/2021/04/16/1/Gogis-Sri-lanka)**
.�,