தமிழகத்தில் நேற்று (மே 10) முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்றும் கேரள, கர்நாடக எல்லைகள் மூடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வார முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய அரசு துறைகளான மருத்துவத்துறை, வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, சிறை, மாவட்டத் தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர் வழங்கல், வனத்துறை, கருவூலத்துறை, சமூக நலன் உள்ளிட்ட துறைகளை தவிர பிற அரசு அலுவலகங்கள் ஏதும் இயங்காது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதியில்லை. நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகள் முழுமையாக மூடப்படுகின்றன. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை.
இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் இ-பதிவு பெற்ற பின்னரே வர வேண்டும். அவ்வாறு வந்தாலும் சோதனை சாவடிகளில் முழு விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் சேவை, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் மற்றும் இதர தனியார் பயண வாகனங்கள் ஆகியவை இயங்க தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் திருமணம், இறப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய காரணங்களுக்கு உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,