இந்தியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையில், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் கம்பெனிகள் பல தனியார் வசம் இருப்பதால் அவர்கள் விலை அதிகமாக விற்கின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும்.
மேலும் இந்தியாவிலுள்ள ஆக்சிஜன் கம்பெனிகள், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்தையும் இந்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(மே 12) விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் தற்போதைய மருத்துவ சூழலை நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், தேவைப்படும் நேரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
**-வினிதா**
�,”