சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல வசதியாக கார் டாக்சி ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. பரவல் அதிகரிக்க அதிகரிக்க, மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதனால், மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தனியார் ஆம்புலன்ஸ்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சென்னையில் 250 கால் டாக்சிகள் ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்ட கால் டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50 ஆம்புலன்ஸ்கள் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள், கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல இந்த ஆம்புலன்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆம்புலன்ஸ்களில் வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் வசதிகள் தயார் நிலையில் இருக்கும். இதன்மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
”கால் டாக்சி ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருக்கும் கால் டாக்சி உரிமையாளர்களுக்கும் இந்த திட்டம் பயன்படும்” என சென்னை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் இந்த பேரிடர் கால முயற்சிக்கு, இந்திய மருத்துவ கழகத்தின் ஆராய்ச்சியாளர் பிரதீப் கவுர், ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த துரிதமான நடவடிக்கை மூலம், ஆம்புலன்ஸ் சேவையின்மீது வைக்கப்படும் சுமை ஓரளவு குறையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
**-வினிதா**
�,