தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தியளவில், தமிழகம் கொரோனா தினசரி பாதிப்பில், 2வது இடத்திலும், தினசரி உயிரிழப்பில் 4வது இடத்திலும் உள்ளது.
நேற்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 82 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 17,670 ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 27 சதவிகிதத்தினர் எந்தவித இணைநோயும் இல்லாதவர்கள்.
நேற்று மட்டும் தமிழகத்தில் 1,264 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 10,669 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் சென்னையில் பாதிப்பு 6 சதவிகிதம் குறைந்துள்ளது. அதாவது, சனிக்கிழமை 6,640 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,247 ஆக குறைந்துள்ளது.
அதுபோன்று காஞ்சிபுரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் சதவிகிதம் 26% குறைந்துள்ளது. ஆனால், செங்கல்பட்டு(2,041), திருவள்ளூர்(1,835) மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாகதான் உள்ளது.
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் 3,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் 2,19,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 66,000(30%) பேர் மருத்துவமனையிலும், 24,000(11%) பேர் கொரோனா கேர் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முழு ஊரடங்கடான நேற்று 21,801 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். முந்தைய நாளில் 62,353 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 69 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.
**பிரபலங்கள் உயிரிழப்பு**
கொரோனா இரண்டாவது அலை பலரையும் காவு வாங்கி வருகிறது. இதன்படி இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த்,தயாளன்,நடிகர்கள் பாண்டு, பொன்ராஜ், கல்தூண் திலக்,நெல்லை சிவா, கில்லி மாறன், ஆட்டோகிராப் பாடகர் கோமகன், , தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், அந்தோணி சேவியர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என்று பட்டியல் நீண்டு செல்கிறது.
இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி நெல்லை தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக நீஷ் பதவியேற்றிருந்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
**-வினிதா, இராமானுஜம்**
.�,