�கொரோனா தொற்று குறைவாகவுள்ள நான்கு மாவட்டங்களில் 50 சதவிகிதப் பயணிகளுடன் மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னையில் அதிக மின்சார ரயில்களை இயக்கவும் மற்ற நேரங்களில் குறைந்த அளவில் இயக்கவும் சென்னை கோட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று வரை முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
கடந்த மாதம் 200 ரயில் சேவை இருந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 382 சேவைகள் இயக்கப்படுகின்றன. இன்று முதல் மேலும் சேவையை அதிகரிக்க சென்னை கோட்டம் முடிவு செய்துள்ளது.
கடைகள், தொழில் நிறுவனங்கள், அரசு துறைகள் கூடுதல் ஊழியர்களுடன் பணிபுரியும் வகையில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்படுகிறது. கூடுதலாக 100 மின்சார ரயில்கள் வரை இயக்குவதற்கு வாய்ப்புள்ளது.
புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வசதியாக காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக ரயில்களை இயக்கவும் மற்ற நேரங்களில் குறைந்த அளவில் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள் பணிக்கு வந்து செல்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்றும் ரயில் பயணத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்வதற்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிகிறது.
**-ராஜ்**
.�,