கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு எளிய மருத்துவம்!

public

சளி, இருமல் போன்றவை நம் உடல்நலம் உண்டாக்கும் எதிர்வினைகளே. அப்படி ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக மருந்து, மாத்திரைகளை நாடுவதைவிட, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி எளிய மருந்துகள் தயாரித்து நோய் போக்கிய மரபு நம்முடையது.

இன்று, சாதாரண சளி, இருமல், தலைவலி போன்ற நோய்களுக்கு மருத்துவரின் பரிந்துரைகூட இல்லாமல் மாத்திரைகளை வாங்கி விழுங்குபவர்கள் பலர். அதனால் ஏற்படும் விளைவுகளும், பக்க விளைவுகளும் பல. எளிய ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வீரிய மருந்துகளை நாடாமல், இயற்கையின் கொடைகளைப் பயன்படுத்துவோம்.

* வயிறு மந்தமாக இருந்தால் சீரகம் போட்டுக் காய்ச்சிய குடிநீரைப் பருகலாம். சோம்பு கொண்டு தயாரிக்கப்படும் சோம்புத் தேநீரும் நல்லது.

* சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் உதவியுடன் தயாரிக்கப்படும் ‘பஞ்ச தீபாக்கினி சூரணம்’ செரிமானக் கருவிகளைத் துடிப்புடன் செயல்படவைக்கும் கூர்மையான ஆயுதம். தேனில் குழைத்தும் பஞ்ச தீபாக்கினி சூரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

* தொண்டை லேசாகக் கரகரக்கும்போதே சிற்றரத்தை அல்லது சிறிய அதிமதுரத் துண்டை வாயில் போட்டுச் சுவைக்க, குணம்பெறுதல் ஆரம்பமாகிவிடும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூலிகைகளின் துணையுடன் தயாரிக்கப்படும் சித்த மருந்தான `திரிகடுகு சூரணம்’ சளி, இருமலுக்கான அற்புத மருந்து. லேசான உடல் சோர்வு, மூக்கில் நீர்வடிதல் போன்ற குறிகுணம் தோன்றும்போது திரிகடுகு சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

* கிருமிகளை விரட்டியடிக்கும் மிளகுக் கஷாயம், வெப்பத்தை அளித்துக் கோழையை வெளியேற்றும் கொள்ளு ரசம், கபத்தைத் தகர்க்கும் முசுமுசுக்கை அடை, தொட்டுக்கொள்ள தூதுவளைச் சட்னி, சிற்றுண்டியாக கற்பூரவல்லி பஜ்ஜி… இதுபோன்ற உணவுகளே அடிப்படையான கப நோய்களைத் துரத்திவிடும்.

* நீரில் துளசி இலை, மிளகு, கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி அருந்துவது, பாலில் மிளகு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துப் பருகுவது சளியை விரட்டும்.

* வெற்றிலையில் மிளகை வைத்து மென்று சாப்பிட கோழை வெளியேறும். மிளகைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிடலாம். ஆடாதோடை கொண்டு தயாரிக்கப்படும் ஆடாதொடை மணப்பாகு மற்றும் ஆடாதொடை குடிநீர், கப நோய்களுக்கான சிறந்த மருந்து.

* நீர்கோத்து தலை பாரமாக இருப்பின் வேதுபிடித்தல் அற்புதமான பலனைக் கொடுக்கும். கொதிக்கின்ற தண்ணீரில் நொச்சி, கற்பூரவல்லி, திருநீற்றுப்பச்சிலை போன்ற ஆவியாகக்கூடிய, எண்ணெய்ச் சத்து நிறைந்த மூலிகைகளைப் போட்டு வேது பிடிக்கும்போது, தலைபாரம் படிப்படியாக இறங்குவதை உணரலாம்.

* நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த மருந்தை, இஞ்சிச் சாற்றில் குழைத்து நெற்றி, மூக்குப் பகுதிகளில் பற்றுப்போடுவதாலும் தலைபாரம் குறையும். சுக்கைப் பால்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம்.

* பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சி நுரையீரல் சார்ந்த தொந்தரவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலிக்கு இஞ்சி கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய இஞ்சி ரசம், இஞ்சித் துவையல், இஞ்சித் தேன் முதன்மையான மருந்து.

**[நேற்றைய ரெசிப்பி: உளுந்து சாதம்](https://minnambalam.com/public/2021/07/03/1/bengal-gram-rice)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *