மக்களின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் நைட்ரஜன் ஆக்சைடு மாசு டெல்லி, சென்னை உட்பட எட்டு நகரங்களில் அதிகரித்துள்ளது என்று பசுமை அமைதி இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
“கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு ஏப்ரல் வரை டெல்லியில் நைட்ரஜன் ஆக்சைடு மாசு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மும்பை 52 சதவிகிதம், பெங்களூரு 90 சதவிகிதம், ஹைதராபாத் 69 சதவிகிதம், சென்னை 94 சதவிகிதம், கொல்கத்தா 11 சதவிகிதம், ஜெய்ப்பூர் 47 சதவிகிதம், லக்னோ 32 சதவிகிதம் என அதிகரித்துள்ளது. இந்த உயர்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் எரிக்கப்படும்போது, பெரும்பாலான மோட்டார் வாகனங்கள் இயக்கும்போது, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் இயங்கும்போது வெளியேறும் நைட்ரஜன் ஆக்சைடு மிகவும் ஆபத்தானது. இது, எல்லா வயது மக்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சுவாச, சுற்றோட்ட அமைப்புகள் மற்றும் மூளையை பாதித்து இறப்புக்கு வழிவகுக்கும். டெல்லியில் கடந்தாண்டு ஏப்ரலில் இருந்த அளவைவிட நைட்ரஜன் ஆக்சைடு மாசுபாடு 125 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டை போலவே வானிலை இருந்திருந்தால் இது 146 சதவிகிதமாக உயர்ந்திருக்கும். டெல்லியுடன் ஒப்பிடுகையில் சற்று ஆறுதல் அளித்தாலும், மற்ற இந்திய நகரங்களும் நைட்ரஜன் ஆக்சைடு அளவு கவலையை அதிகரித்துள்ளன. 2021ஆம் ஆண்டில் தொற்றுநோய் இந்தியாவில் தொடர்ந்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மாசுபட்ட நகரங்கள் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு ஆளாகின்றன என்பதற்காக ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன” என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்று தர குறியீட்டின்படி காற்று மாசின் அளவு, கடந்த தீபாவளி நாளில் சற்று மிதமான நிலையிலும், சாதாரண நாளில் திருப்திகரமான நிலையிலும் கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் நிர்ணயிக்கப்பட்ட 80 அளவுக்கும் அதிகமாக இருப்பது ஆபத்து என்கிறது இந்த ஆய்வு.
**-ராஜ்**
.�,