பலகாரங்களில் காரம் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது மிக்சர். இந்த தீபாவளிக்குச் செய்யும் பலகாரங்களில் சத்தான கம்பு அவல் மிக்சர் செய்து அசத்தலாம். ரிலாக்ஸ் டைமுக்கேற்ற நொறுக்குத் தீனியாகவும் பயன்படுத்தலாம்.
**எப்படிச் செய்வது?**
வாணலியில் தேவையான அளவு எண்ணெய்விட்டு சூடாக்கவும். வலையுள்ள எவர்சில்வர் வடிகட்டியில் கால் கப் பொட்டுக்கடலையை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். இதேபோல 15 முந்திரிப்பருப்பு, இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை, மூன்று – நான்கு உலர்திராட்சைகள், சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும், இறுதியாக ஒரு கப் கம்பு அவலை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடிய டிஷ்யூ பேப்பரில் போடவும். அகலமான தட்டில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வறுத்த பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் கம்பு அவல் மிக்சர் ரெடி.
**குறிப்பு**
கம்பு அவலை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக மைக்ரோவேவ் அவனிலும் பொரித்தெடுக்கலாம்.
**சிறப்பு**
கம்பு அவல், சிவப்பு அரிசி அவலை போன்றே தயாரிக்கப்படுகிறது. தற்போது எல்லா டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் இந்தக் கம்பு அவல், இழந்த சக்தியை உடனடியாக மீட்டு தரும்.
�,