தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், இன்றைய நிலவரப்படி பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்திருக்கிறது. இதில் தக்காளியின் விலை மீண்டும் 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் பருவமழையையொட்டி வரத்துக் குறைவு காரணமாகத் தக்காளி விலை உயர்ந்தது. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனையானது. பின்னர் ரூ.50 முதல் ரூ.80 வரையில் விற்பனையானது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பெரும்பாலான சில்லறைக் கடைகளில் ரூ. 100 முதல் ரூ.120 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மொத்த விற்பனை கடையில் ரூ. 80க்கு தக்காளி விற்பனையாகும் நிலையில், சில்லறை கடைகளில் 20 ரூபாய்க்கும் மேல் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகளின் விலை 100 ரூபாயைத் தொட்டுள்ளன. சென்னையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.100, கத்தரிக்காய் ரூ.100, குடை மிளகாய் – ரூ.100, கொத்தவரை – ரூ.99, வெண்டைக்காய் ரூ.90, ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250 எனக் காய்கறிகளின் விலை டாப் ரேட்டில் விற்பனையாவதால், சாமானிய மக்கள் காய்கறிகளை வாங்கி சமைத்து உண்ண முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தசூழலில், கிடுகிடுவென உயரும் காய்கறிகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கோரிக்கையாக உள்ளது.
**பிரியா**
�,