கிச்சன் கீர்த்தனா: காளான் சீரக சம்பா பிரியாணி!


ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். பிரியாணி இல்லாமல் புத்தாண்டா? ஆனால் இன்று சிலர் சனிக்கிழமை என்பதால் அசைவம் வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த காளான் சீரக சம்பா பிரியாணி செய்து புத்தாண்டைக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
சீரக சம்பா - ஒரு கப்
காளான் - 12
வெங்காயம், தக்காளி - தலா 2
பச்சை மிளகாய் - ஒன்று
புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
மிளகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள், தனியாதூள் - தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று
எப்படிச் செய்வது?
அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். காளான், வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைக்கவும். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து வெங்காயம், சிட்டிகை உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அரைத்த விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அதில் தயிர் சேர்த்துக் கலந்து, ஒன்றே முக்கால் கப் கொதிக்கும் நீர் சேர்க்கவும். அதனுடன் காளான், தேவையான உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அரிசி சேர்த்து மூடி, மிதமான தீயில் வேகவிட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிரெஷர் அடங்கியதும் திறந்து கிளறிப் பரிமாறவும்.