திருச்சியில் நெடுஞ்சாலை அருகே 24 குரங்குகள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயில்கள், நாய்களுக்கு விஷம் வைத்து கொல்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் 18க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே நெடுங்கூர் பகுதியில் கூட்டமாக குரங்குகள் மயங்கிக் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், குரங்குகள் அனைத்தும் இறந்து கிடப்பதை உறுதி செய்தனர் இதில் 6 பெண் குரங்குகள், 18 ஆண் குரங்குகள் என மொத்தம் 24 குரங்குகள் இறந்துள்ளன.
24 குரங்குகளையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்க திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த குரங்குகள் மந்தி வகையை சேர்ந்தவை மற்றும் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் வளர்பவை என்பதால் திட்டமிட்டே விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டனவா? அல்லது இவை விஷப் பழங்கள், பண்டங்களை உண்டதால் இறந்தனவா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும் என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
**-வினிதா**
�,