சேகர் ரெட்டிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக அரசுக்கு 247.13 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் 5 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
சிபிஐ தாக்கல் செய்த இறுதி அறிக்கையின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி ஜவஹர் அனுமதி அளித்துள்ளார். “புலனாய்வு விசாரணையின் முடிவில், விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலத்துடன் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை முடிக்க சிபிசி 173 (2) வது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள், பெயர் தெரியாத வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுடன் இணைந்து சதி செய்து அரசாங்கத்தை ஏமாற்றினர் என்பதற்கான போதிய ஆதாரங்களை சிபிஐ காண்பிக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “170 சாட்சிகள் மற்றும் 879 ஆவணங்களின் அறிக்கை அடிப்படையில் கிரிமினல் சதி, மோசடி அல்லது கிரிமினல் முறைகேடு ஆகிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை” எனவும் கூறியது.
சேகர் ரெட்டியுடன் இவ்வழக்கில் எம் பிரேம்குமார், கே.சீனிவாசுலு, கே.ரெத்தினம், எஸ்.ராமச்சந்திரன், பரஸ்மல் லோதா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
பணமழிப்பழிப்புக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி மற்றும் அவருடைய தொழில் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 33.89 கோடி ரூபாய் புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழைய நோட்டுகளை, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு மூன்று தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தது. அதில், இரண்டு எப்ஃஐஆரை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துவிட்ட நிலையில், மூன்றாவது போதிய ஆதாரம் இல்லாததால் தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
**எழில்**
�,