கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஜூன் 24ஆம் தேதி 1,355 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் இரு மடங்கு அதிகரித்து நேற்று 2,065 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க அணிவது கட்டாயம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதில் கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது, தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் முதற்கட்டமாகக் கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் அவசர ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்