டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குல்லு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில், “டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையின்போது ரசீதுகள் வழங்கப்படுவது இல்லை. 2003ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிகளின்படி, மதுபானங்கள் விலை பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும். அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கு விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகம், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, திடீர் சோதனைகளை நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் பணியாளர்கள், சூப்பர்வைசர்களுக்கு 1,000-10,000 வரை அபராதம் விதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததாக 9,319 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் காணொலி காட்சி மூலம் நேற்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு பதில்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அத்தோடு, வழக்கை முடித்து வைத்தும் உத்தரவு பிறப்பித்தனர்.
**எழில்**�,